search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு கொலை"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • எடப்பாடியின் முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியான உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    உதவி கமிஷனர் கனகராஜின் வீடு சென்னை மந்தைவெளியில் உள்ள சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் உள்ளது.

    அங்குள்ள வீட்டுக்கு இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சென்றனர்.

    கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான முருகவேல் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி வரும் நிலையில்தான் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    காலை 7.30 மணியில் இருந்து 10 மணி வரையில் உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

    இதன்படி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மேலும் பலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு வசதியாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் கொடநாடு வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் கொடநாடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

    • காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது.
    • அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

    அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கோவை, அக்.6-

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

    கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துபோனார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரடியாகவே விசாரணை மேற்கொண்டார்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பல நபர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதுவரை தனிப்படையினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொடநாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ. அதிகாரி நியமனம்

    தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு பிறப்பித்தார்.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டு விட்டதால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று உடனடியாக விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×